திருத்துறைப்பூண்டி, ஆக.7 - திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி தாலுக்காவுக்குட்பட்ட பொதுமக்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இலவச வீட்டு மனைப் பட்டா மற்றும் தாட்கோ, மாவட்ட தொழில் மையம் மூலம் வங்கி கடன் கிடைக்கவில்லை. இதற்காக பல்வேறு துறை அலுவலர்களிடம் புகார் மனு கொடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், சம்பந்தப்பட்ட மக்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அதன்மீதும் நடவடிக்கை எடுக்காமல், துறை சார்ந்த அலுவலர்கள் பல்வேறு காரணங்களை கூறி மனுதாரர்களின் மனுக்கள் நிராகரித்தனர். இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான பொது மக்கள், திங்கட்கிழமை தங்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, தமிழ்நாடு அரசி னால் பெற்ற அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்து விட்டு, ‘நாங்கள் நாடோடியாக வாழ்ந்து விடுகிறோம்’ எனக் கூறி திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் ஆவ ணங்களை ஒப்படைத்தனர்.