திடீர் தொடர் கனமழையினால் அழிந்து போன பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30ஆயிரம் இழப்பீடு வழங்கக் கோரியும் வேலையிழந்த விவசாயக் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்கக்கோரியும் 2020-21ல் பயிர்க்காப்பீட்டு பிரீமியம் செலுத்தி விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் காப்பீடு வழங்கக் கோரியும் காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் ஜனவரி 5 புதனன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் மாவட்ட ஆட்சியரகங்கள் முன்பு நடைபெற்றது. மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம், தஞ்சாவூரில் விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர், விவசாயிகள் சங்க துணைத் தலைவர் டி.ரவீந்திரன், நாகப்பட்டினத்தில் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் வேளாண் துறை அமைச்சர், புதனன்று மாலையில் சங்கத் தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாக பேச்சு நடத்தினார். விவசாயிகளின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததின் பேரில், காத்திருப்புப் போராட்டம் புதனன்று மாலை ஒத்தி வைக்கப்பட்டது.