districts

img

மயிலாடுதுறையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இல்லை

மயிலாடுதுறை,  ஜூலை 5 - மயிலாடுதுறை மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இல்லாததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.                                                       மயிலாடுதுறையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம் உள்ளிட்ட வட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வாடகை வாகன ஓட்டிகள் வாகனப் பதிவு, உரிமம் நீட்டிப்பு உள்ளிட்ட சேவைகளுக்காக வந்து செல்கின்றனர்.  ஆனால் இங்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பணியிடம் கடந்த ஆறு மாதமாக நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் அருகே உள்ள கும்பகோணம் அல்லது தஞ்சாவூரில் பணிபுரியும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், பகுதி நேரமாக அவ்வப்போது மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலக பணிகளை கவனித்து வந்தனர்.  இந்நிலையில் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூரிலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இல்லாததால், மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. கடந்த 20 நாட்களுக்கு மேலாக புதிய வாடகை வாகனங்கள் பதிவு செய்வது, வாடகை வாகனங்களுக்கான பர்மிட் வழங்குவது, காலாவதியான பர்மிட்களை புதுப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாடகை வாகனங்கள் வாங்கியவர்கள் மற்றும் இயக்குபவர்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர். அதேபோல் காலாவதியான ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிக்கும் பணியும் தடைபட்டுள்ளதால், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் விசாரித்த போது, கடந்த ஆறு மாதங்களாகவே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பணி காலியாக உள்ளது. பகுதி நேரமாக பணியாற்றியவர்களும் பணி மாறுதல் மற்றும் விடுப்பில் சென்றதால், கடந்த 20 நாட்களாக அனைத்துப் பணிகளும் முடங்கி உள்ளது தெரிவிக்கின்றனர். வாடகை வாகனத்தை பதிவு செய்யவே காலதாமதமாகும் நிலையில், பர்மிட் வழங்க மேலும் தாமதமாகும் என கவலை தெரிவித்த வாகன ஓட்டிகள், கடனுக்கு வாங்கிய வண்டியை இயக்க முடியாமலும், உரிய நேரத்தில் தவணைத் தொகை கட்ட முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே மயிலாடுதுறைக்கு புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலரை விரைந்து நியமிக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.