கரூர், மே 7 - கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று செல்லும் மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர்பான ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், “12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவியர்களுக்கு உயர்கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த “கல்லூரி கனவு” என்ற நிகழ்ச்சி, கரூர் மாவட்டத்தில் 13.5.2024 அன்று கரூர்-கோவை சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் அலுவலர்கள் மற்றும் துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர். இதில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் 13.05.2024 (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நேரடியாக நிகழ்ச்சி நடைபெறும் கொங்கு திருமண மண்டபத்திற்கு வர வேண்டும்” என்றார்.