கும்பகோணம், பிப்.10- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவிலின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் மணிமுத்தா நதி எனும் திருக்குளம் சுமார் 635 அடி நீளமும் 235 அடி அகலமும் கொண்டது. குளத்தில் சுமார் 20 ஆண்டுகளாக தீர்த்த வாரியும், 10 ஆண்டுகளாக தெப்பத் திருவிழாவும் நடைபெறவில்லை. ஏனெனில், இத்திருக்குளத்தில் மணிமுத்தா நதிக்கு திருமலை ராஜன் ஆற்றில் இருந்து வாய்க்கால் வழியாக வரும் நீர் பாதை மற்றும் வடிகாலில் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபம், உணவு விடுதி, குடியிருப்புகள், பொது கழிப்பறை ஆகியவற்றின் கழிவுநீர், குளத்தில் தண்ணீர் வெளியேறும் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவு நீர் வெளியே புதைவட சாக்கடைக்குச் சென்று ஊரின் வெளிப்புறம் உள்ள குளத்தில் கலந்து பாசன கால்வாயில் செல்ல வேண்டும். ஆனால், குளத்துக்கு தண்ணீர் செல்லும் பாதையை சிலர், காங்கிரீட் சுவர் அமைத்து தடுத்து இருப்பதால் கழிவுநீர் வெளியே செல்ல முடியாமல் மீண்டும் வந்த பாதையிலேயே வந்து மணிமுத்தா குளத்தில் விழுந்து கலந்துவிடுகிறது. இதனால், கழிவுநீர் கலப்பதால் கோவிலில் தீர்த்த வாரியோ, தெப்பத் திருவிழாவோ நடத்தக்கூடாது. கழிவு நீரை அகற்றிய பின்னரே நடத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை வைத்ததால் விழாக்கள் நிறுத்தப்பட்டன. ஆனால், இன்றைய தலைமுறையினர் விழா பற்றி தெரியாத அவலமும், புராண வரலாறு மறைக்கப்படும் நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மணிமுத்தா நதி என்று சொல்லப்படும் திருக்குளத்தில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத் துறையினர் கண்காணித்து கழிவுநீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை விடுக்கின்றனர்.