தஞ்சாவூர், ஜூன் 6-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பழக்கடைகளில், மக்கள் உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ரசாய னம் தடவி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், வாழைப் பழங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலருக்கு வாட்ஸ் அப்பில் புகார் மனு வந்தது.
இதையடுத்து, பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரசாயனம் தடவி பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்கள், மாம்பழங்கள், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன பழங்கள் என மொத்தம் 121 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்பிரமணியன் கூறுகையில், “உணவுப்பொருள் விற்கும் பல கடை களில் உரிமம் மற்றும் பதிவு இல்லாமல் உள்ளது. இவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்களிலோ, கணினி சேவை மையங்களிலோ ஆன்லைனில் பதிவு செய்து உரிமம்- பதிவு பெற்ற பின்னர்தான் உணவுப் பொருட்களை விற் பனை செய்ய வேண்டும். விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.