districts

திருச்சி முக்கிய செய்திகள்

இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வங்கியில் பணம் செலுத்தும் சீட்டு  பொதுமக்கள் அவதி

தஞ்சாவூர், நவ.2 -  பேராவூரணி தனியார் வங்கியில், பணம் செலுத்தும் சீட்டு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்ப தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி முதன்மைச் சாலை யில், டிபிஎஸ் என்ற தனியார் வங்கி உள்ளது. இந்த வங்கி ஏற்கனவே லட்சுமி விலாஸ் பேங்க் என்ற பெயரில் இயங்கி வந்தது. பேராவூரணி நகரம் கிராமப்புறங்கள் அதிகம் சார்ந்த ஒரு வளர்ச்சி பெறாத சிறு நகரமாகும்.  இந்த வங்கியில், பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கணக்கு தொடங்கி வரவு - செலவு செய்து வருகின்றனர். இந்நிலையில், வங்கியில் பணம் செலுத்தும் சீட்டு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. இதனால் படிப்பறிவு இல்லாத பாமர மக்கள், பெண்கள் பணம் செலுத்தும் சீட்டை பூர்த்தி செய்ய முடியாமல் தடுமாறி வருகின்றனர். வங்கிக்கு வரும் படித்தவர்களிடம் கொடுத்து பணம் செலுத்தி சீட்டை பூர்த்தி செய்யும் நிலை உள்ளது. ஒருவருக்கு பணம் செலுத்தும் சீட்டை எழுதிக் கொடுத்து விட்டு திரும்பினால், மற்றொருவர் பணம் செலுத்தும் சீட்டை பூர்த்தி செய்து தருமாறு கேட்கும் நிலை உள்ளது.  இதனால், வங்கிக்கு அவசரத்தோடு வரும் படித்த வாடிக்கையாளர்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.  எனவே, வங்கி நிர்வாகம் பிராந்திய மொழியில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் பணம் செலுத்தும் சீட்டு மற்றும் வங்கி சம்பந்தப்பட்ட விபரங்களை புரிந்து கொள்ளும் வகையில் ஆவணங்களிலும் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து, திமுக அயலக அணி மாவட்டச் செய லாளர் ஷாஜகான் கூறுகையில், “பணம் செலுத்தும் சீட்டு ஆங்கிலம், இந்தியில்  இருப்பதால் பொதுமக்கள் பணம் செலுத்தும் சீட்டில் எழுதத் தெரியாமல் தடுமாறி வருகின்ற னர். இதுகுறித்து வங்கி நிர்வாகத்திடம் கேட்டால், தமிழில் அச்சடிக்கப்பட்ட பணம் செலுத்தும் சீட்டு முடிந்து விட்டது என்கின்றனர். கிராமப்புற மக்கள் பயன்பாடு வகையில் வங்கி நிர்வாகம் பணம் செலுத்தும் சீட்டு மற்றும் இதர ஆவணங்களை தமிழில் அச்சிட்டு, வாடிக்கையாளர்களான பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். இதனை அனைத்து வங்கிகளும் கடைப் பிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். 

அரசுப் பேருந்து மோதி  பள்ளி மாணவர் பலி

தஞ்சாவூர், நவ.2 -  தஞ்சாவூரில் அரசுப் பேருந்து மோதி பள்ளி மாணவர் உயிரிழந்தார்.  தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் தவபிரபு. இவரது மகன் ரித்திக் ரோஷன்(15). இவர் தஞ்சாவூரில் உள்ள ஒரு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை காலை ரித்திக் ரோஷன் மோட்டார் சைக்கிளில் கரந்தைக்கு வந்து அரிசி வாங்கிக் கொண்டு, வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது வெண்ணாறு பாலத்தில் திருக்கருக்காவூரி லிருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த அரசு நகரப் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ரித்திக் ரோஷன் படுகாயமடைந்து, அதே இடத்தில் இறந்தார். தகவலறிந்து தஞ்சாவூர் நகர போக்குவரத்து விசா ரணை பிரிவு உதவி ஆய்வாளர் தங்கராஜ் மற்றும் காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து ரித்திக் ரோஷன் உடலைக் கைப்பற்றி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நிகழ்ந்ததும் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித் துள்ளனர். சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்தே காவல்துறையினர் தாமதமாக வந்ததால், பொதுமக்கள் காவல்துறையினர் மீது அதிருப்தி அடைந்தனர். விபத்து நிகழ்ந்த இடம் வெண்ணாறு பாலம் என்பதால், அப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து பரபரப்பாக காணப்படுவது வழக்கம். வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனால் காவல்துறையினர் வெகு நேரம் கழித்தே வந்ததால் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடுமையாக அவதிக்குள்ளாகினர்.