பாபநாசம், மார்ச் 3- அய்யம் பேட்டை - கணபதி அக்ரஹாரம் மெயின் சாலை முடிவில் திருவையாறு, கும்பகோணம் செல்லும் சாலையில் வேகத் தடை இல்லாத காரணத்தால் அடிக்கடி விபத்து நேர்கின்றது. எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், இந்தச் சாலையில் நெடுஞ்சாலைத் துறை வேகத் தடை அமைக்க வேண்டும். இதே போன்று, கணபதி அக்ரஹாரம் காவிரி பாலத்தில் இரவு நேரத்தில் இருளாக இருப்பதால், சட்ட விரோத செயல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, காவிரி பாலத்தில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். கணபதி அக்ரஹாரத்தில் பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து நிழற்குடை அமைக்க வேண்டும். கணபதி அக்ரஹாரத்தில் சாலையோரம் குப்பைகள் கொட்டப் படுவதால், காற்று வீசும்போது குப்பைகள் பறக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமுள்ளது. இதை தவிர்க்க கணபதி அக்ரஹாரத்தில் குப்பைக் கிடங்கு அமைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.