districts

வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர்,மே.5-

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

   மாவட்ட ஆட்சியர் நன்னிலம் ஒன்றியம், சலீப்பேரி ஊராட்சியில் ரூ.7.65 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நெல் அடிக்கும் களத்தினையும், ரூ.75 ஆயிரம் மதிப்பீட்டில் மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகை பழுது நீக்கம் செய்யப்பட்டு இருப்பதையும் பார்வையிட்டார்.  

  சலிப்பேரி ஊராட்சி தெற்கு தெரு தாண்டவன் குளம் தூர்வாருவது குறித்தும், பத்தினியாபுரம் ஆற்றங்கரைத்தெரு பிரதம மந்திரி குடியிருப்பு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுவரும் வீடுகளையும் ஆய்வு செய்தார்.  

  ஆனைக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறையினையும் ஆனைக்குப்பம் பள்ளிகூடத்தெருவில் ரூ.84 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்து உறிஞ்சிக்குழியினையும், தட்டாத்திமூலை குளத்தில் படித்துரை கட்டப்படவுள்ள பகுதியினையும் ஆட்சியர் ஆய்வு பார்வையிட்டார்.

  ஆய்வின்போது, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, நன்னிலம் வட்டாட்சியர் ஜெகதீசன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.