தஞ்சாவூர், ஜூன்.4 -
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் இயங்கி வரும், தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தின் ஈராண்டு தொல்லியல் முதுநிலைப் பட்டயம் மற்றும் ஈராண்டு கல்வெட்டியல் முதுநிலைப் பட்டயம் ஆகிய பட்டயங்களில் பயின்று வரும் 29 மாணவர்களுக்கு, மரபு மேலாண்மை மற்றும் தொல்பொருட்களைப் பாதுகாத்தல் பாடப்பிரிவின் ஒரு பகுதியாக வேதியியல் முறையில் தொல்பொருட்களைப் பாதுகாத்தல் குறித்து தஞ்சாவூர் மணிமண்டபத்திலுள்ள இராஜராஜன் அகழ்வைப்பகத்தில், ஜூன்.1, 2, 3 ஆகிய மூன்று நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது.
சுடுமண்ணாலான பொருட்கள், இரும்பு, செம்பு, பித்தளையினாலான உலோகப் பொருட்கள், செப்புக் காசுகள், கற்சிலைகள் போன்ற தொல்பொருட்களைப் பாதுகாத்தல் மற்றும் தீயணைப்புக் கருவியைப் பயன்படுத்துதல் குறித்து அருங்காட்சியகங்கள் துறை உதவி இயக்குநர் வி.ஜெயராஜ், ஓலைச் சுவடிகள் பாதுகாத்தல் குறித்து பி.பெருமாள், தாள் சுவடிகள் பாதுகாத்தல் குறித்து பி.ரங்கநாதன் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சியளித்தனர்.
இந்தப் பயிற்சி முகாமில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை துணை இயக்குநர் இரா.சிவானந்தம், தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவன ஒருங்கிணைப்பாளர் கி.பாக்கியலட்சுமி, தொல்லியல் அலுவலர்கள் த.தங்கதுரை, அ.சாய்பிரியா, சு.மூ.உமையாள், இரசாயனர் ச.செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.