திருச்சிராப்பள்ளி, ஏப். 3 - திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பகுதி கோவண்டாகுறிச்சி கிராமம், வடுகப்பட்டி ஊராட்சி காமராஜபுரம் பகுதியில் சாலை விரிவாக்கத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். காமராஜபுரம் மக்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டாக்களை உடனே கிராம வரைப்படத்தில் ஏற்றி மீதம் உள்ளவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். அங்கன்வாடிக்கு செல்ல மாற்றுப்பாதை ஏற்பாடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அங்கன்வாடிக்கு அருகில் உள்ள போரை சரிசெய்து பைப்லைன் மற்றும் தெருவிளக்கு அமைக்க வேண்டும். கோவண்டாகுறிச்சி பஞ்சாயத்திலிருந்து 2500-க்கும் மேல் வாக்குகள் கொண்ட வடுகர்பேட்டையை தனி பஞ்சாயத்தாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புள்ளம்பாடி ஒன்றியக் குழு சார்பில் வடுகர்பேட்டை ஊராட்சி மன்றம் எதிரில் தொடர் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், ஒன்றிய செயலாளர் ரஜினிகாந்த், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் குமார், வினோத்குமார், செஞ்சுடர், அரசு அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில், பட்டாக்களை கிராம வரைப்படத்தில் ஒரு வாரத்தில் பதிவு செய்வது. அங்கன்வாடிக்கு மாற்றுப்பாதை அமைக்க தளப்பார்வை செய்து உரிய நடவடிக்கை எடுப்பது. காமராஜபுரம் பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தனித்தனியாக நன்னீரும், உப்பு நீரும் இனிவரும் காலங்களில் ஏற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வருவது. சாலை விரிவாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மாற்று இடம் அளிப்பதற்கு முன்னுரிமை பட்டியல் தயார் செய்து தகுதியான இடம் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் மேல் நடவடிக்கை எடுப்பது என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து தொடர் காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.