மயிலாடுதுறை, ஜூன் 18 - ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற 4-வது யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் நேஷனல் சாம்பியன் ஷிப் குத்துச்சண்டை மற்றும் தடகளப் போட்டியில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி புனித தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 4 பேர் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில், கல்லூரியில் முதலாமாண்டு பி.காம்(சிஏ) பயின்று வரும் பொறையார் ராஜூவ்புரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் மகேஷ், 58 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கமும், தரங்கம்பாடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த மாணவி வைதேகி 51 கிலோ எடைப் பிரிவில் தங்கப்பதக்கமும் வென்றுள்ளனர். மேலும் மாணவி மகேஷ் தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். மாணவிகள் கார்த்திகா மற்றும் ஹிமா ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர். ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கு போதுமான நிதி உதவி கிடைக்காமல் தவித்து வந்த நேரத்தில், பல்வேறு நபர்களின் பங்களிப்பு மூலம் நிதி பெற்று தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று சாதித்துள்ளனர். குறிப்பாக மாணவி மகேஷ்க்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் உதவித்தொகை கிடைத்தது. அரசு இது போன்ற திறமையாளர்களை அடையாளம் கண்டு ஊக்குவிப்பு மற்றும் முறையான பயிற்சி கொடுத்தால், உலகளவில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதிப்பார்கள். பதக்கங்களை வென்று சாதனைப் படைத்த மாணவிகள் ரயில் மூலம் ஊர் திரும்பிய நிலையில், மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் கல்லூரி செயலர் அருட்சகோதரி கருணாஜோசபாத், முதல்வர் காமராசன், கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் அருட்சகோதரி ஸ்டெல்லா ஆகியோர் உற்சாக வரவேற்பளித்து மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.