districts

img

படைப்புழுவால் மக்காச்சோளப் பயிர்கள் பாதிப்பு நிவாரணம் கோரி விவசாயிகள் மனு

அரியலூர், ஜன.30 - அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் பயிருக்கு நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணாவிடம், பளிங்காநத்தம் கிராம விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில், “நிகழாண்டு மக்காச்சோளம் விதை விதைத்த போது, அதிக மழை பெய்ததாலும், அதன்பிறகு படைப்புழு மற்றும் போதிய மழை இல்லாததாலும் மக்காச்சோளம் பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வேளாண் உதவி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வேளாண் அலுவலர்கள் மற்றும் கிராம அலுவலர் ஆகியோர் மக்காச்சோளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து வேளாண் அலுவலர் அறிவுறுத்தலின்படி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது நில உரிமை சிட்டா முதலான ஆவணங்களை கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பித்தனர். ஆனால் இதுவரை நிவாரணமும், காப்பீடுத் தொகையும் வழங்கப்படவில்லை. எனவே ஆட்சியர் அவர்கள் உடனடியாக மேற்கண்ட கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.