மயிலாடுதுறை ஆட்சியர் அறிவுறுத்தல் மயிலாடுதுறை, மார்ச் 22 - மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஆகியோருக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில், சட்டமன்றத் தொகுதிகளுக்கு தலா 3 பறக்கும் படை மற்றும் 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் என 9 பறக்கும் படை குழுக்கள், 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் நியமிக்கப்பட்ட பறக்கும் படையினரின் பணியானது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் வாக்குப்பதிவு முடியும் நாள் வரை செயல்பட வேண்டும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அரசு கட்டிடம், தனியார் கட்டிடம் மற்றும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் மற்றும் பதாகைகள் ஆகியவை அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிகளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வரும் சூழலில் அப்பகுதியில் சோதனையிடும் பொருட்டு வருமான வரித்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும். நேரடியாக பறக்கும் படையினர் வீடு, குடோன் உள்ளிட்ட பகுதிகளை சோதனையிடக் கூடாது. பறக்கும் படை அல்லது நிலையான சாவடி அமைத்து ஆய்வு செய்யும் குழுவினர், ஆய்வின்போது பொதுமக்களிடம் கண்ணியமான முறையில் நடந்து கொள்ள வேண்டும். பெண் பயணியின் கைப்பைகள் பெண் போலீசாரால் மட்டுமே ஆய்வு செய்திடல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். முன்னதாக, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர், கருவி மூலம் கண்காணிப்பு செயலி வழியாக கண்காணிக்கப்படுவதை ஆய்வு செய்தார்.