தஞ்சாவூர், அக்.30- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தற்கொலை முயற்சியை தடுக்க பொதுமக்கள் கொண்டு வரும் குடிநீர் பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் மனு கொடுக்க வரும் பொதுமக்களில் யாராவது ஒருவர், தற்கொலை செய்து கொள்வதற்காக மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோலை தங்களது உடலில் ஊற்றிக் கொள்கின்றனர். இவர்களைக் காவல் துறையினர் மீட்டு, தற்கொலையிலிருந்து காப்பாற்றி அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக, ஆட்சியரக வளாகத்தில் பொதுமக்கள் கொண்டு வரும் குடிநீர் பாட்டில்களை காவல்துறையினர் பரிசோதித்து உள்ளே அனுமதித்து வந்தனர். இந்நிலையில், அக்.16 அன்று மனு கொடுக்க வந்த பெண், ஆட்சியர் முன்னிலையிலேயே மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தனது உடலில் ஊற்றிக் கொண்டார். இதுபோன்று இந்த மாதத்தில் மட்டும் 2 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், குடிநீர் பாட்டில் என்ற பெயரில் மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோல் நிரப்பி எடுத்து வந்து, அதை உள்ளே கொண்டு செல்வதைத் தடுப்பதற்காக பொதுமக்கள் திங்கள்கிழமை கொண்டு வந்த குடிநீர் பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மனு கொடுத்த பிறகு, வீட்டுக்கு செல்லும் போது பொதுமக்கள் தங்களது குடிநீர் பாட்டில்களை மீண்டும் எடுத்துச் சென்றனர்.