மின் ஊழியர்கள் மனு திருச்சிராப்பள்ளி, ஏப்.11 - அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராமல், கைப்பேசியில் கணக்கீடு செய்ய வற்புறுத்தக் கூடாது எனக் கோரி மின் ஊழியர்கள் மனு அளித்துள்ளனர். எந்தவிதமான அடிப்படை வசதியும் செய்து தராமல், மொபைல் ஆப் மூலம் கணக்கீடு செய்ய வற்புறுத்துவதை கைவிட வேண்டும். மொபைல் ஆப் மூலம் கணக்கீடு செய்ய பிரிவு ஊழியர்களுக்கு டேப் மற்றும் சிம்கார்டு நெட்வொர்க் வசதியுடன் வழங்க வேண்டும். மொபைல் ஆப் மூலம் கணக்கீடு செய்ய, கணக்கீட்டாளருக்கு கைபேசி வழங்கி பயிற்சி அளிக்க வேண்டும். 80 சதவீதம் மீட்டர்கள் உயரமான இடத்திலும் மொபைல் ஆப்பில் பதிவு செய்ய முடியாத நிலையிலும் உள்ளதை சரிசெய்ய வேண்டும். பழுதான ஹேண்ட் செட்டுக்கு பதிலாக புதிய ஹேண்ட் செட் உடனே வழங்க வேண்டும். பழுதான கணினி மற்றும் பிரிண்டர்களுக்கு பதிலாக புதிய கணினி மற்றும் பிரிண்டர்களை வழங்க வேண்டும். கணினி மற்றும் பிரிண்டருக்கு தேவையான ரிப்பன் உள்ளிட்ட உதிரி பாகங்களை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) திருச்சி பெருநகர் வட்டம் சார்பில் புதனன்று தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். சிஐடியு மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன், வட்ட செயலாளர் எஸ்.கே. செல்வராஜ், வட்டப் பொருளாளர் பழனியாண்டி ஆகியோர் பேசினர். இறுதியாக, தமிழ்நாடு மின்வாரிய திருச்சி மண்டல தலைமை பொறியாளர் செடியழகனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.