தமிழக அரசின் பெண்கள் நலத்திட்டத்தையும் , இலவச பேருந்தில் பயணித்த பெண் பயணிகளையும் இழிவுபடுத்திய அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் இழிவாக பேசியதை தட்டிக்கேட்ட ஜனநாயக மாதர் சங்கத்தினர் மீதான பொய்வழக்கை திரும்பப்பெறக்கோரியும் ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரை மாநகர் - புறநகர் மாவட்டக்குழுக்கள் சார்பில் வியாழனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புறநகர் மாவட்டச் செயலாளர் க. பிரேமலதா தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலாளர் வை.ஜென்னியம்மாள் முன்னிலை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநில துணைத் தலைவர் ஆர். மல்லிகா, மகளிர் சட்ட உதவி மன்ற தலைவர் வழக்கறிஞர் உ. நிர்மலாராணி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.