districts

புதுப்பட்டினம் கடற்கரை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த முடிவு

தஞ்சாவூர், மார்ச் 13-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதி மக்களின் சுற்றுலாத் தலமாக விளங்கி வரும் புதுப்பட்டினம் கடற்கரைக்கு புதிய சாலை அமைப்பது, அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.  பட்டுக்கோட்டை அருகே உள்ள புதுப்பட்டினம் கடற்கரை இப்பகுதி மக்களின் பொழுதுபோக்கு தலமாக விளங்கி வருகிறது. ஆரம்பக் கட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் வந்து சென்ற நிலையில், தற்போது பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் இதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தங்கள் பொழுதைக் கழிக்க இந்த கடற்கரையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், இந்த கடற்கரையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தி, கடற்கரைக்குச் செல்லும் வகையில் தற்போதுள்ள சாலையையும், வாகனங்கள் வெளியேறுவதற்கான மாற்றுச் சாலையையும் உருவாக்கும் நோக்கத்தோடு புதிய சாலை அமைப்பதற்கான இடம், குடிநீர், கழிப்பறை, குளியல் அறை, உடைமாற்றும் அறை, மின்விளக்கு, பாதுகாப்பு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.  இதில், மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் சங்கர், மீன் வளத்துறை உதவி இயக்குநர் மணிகண்டன், மீன் துறை ஆய்வாளர் கெங்கேஸ்வரி, வனச்சரக அலுவலர் சந்திரசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.