சிபிஎம் சிறப்பு பேரவை: தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு
திருச்சிராப்பள்ளி, ஜூன் 29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட உப்பிலியபுரம் ஒன்றியம் தீக்கதிர் சிறப்பு பேரவை நடைபெற்றது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் தளுகை முத்துக் குமார் தலைமை வகித்தார்.
செயற்குழு உறுப்பினர் பாண்டியன் சிறப்புரை ஆற்றி னார். மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் சிறப்புரையாற்றி னார். இதில் உப்பிலியபுரம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் கிளைச் செயலாளர் கலந்து கொண்டனர். தீக்கதிர் நாளிதழின் ஆறு சந்தாக்கள் சேர்க்கப்பட்டு, மாவட்டச் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. கூட்டத்திற்கு வந்தி ருந்த உறுப்பினர்களுக்கு, கட்சி உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
கடந்த காலத்தில் உப்பிலியபுரம் பகுதியில் கட்சி உறுப்பினராகவும் பிஎஸ்என்எல் ஊழியராகவும் பணி புரிந்த மறைந்த தோழர் சின்ராஜ் நினைவாக, அவரது மனைவியும் அவரது மகன் சரவணனும் தோழர் சின்ராஜ் வாங்கி வாசித்து பாதுகாத்த புத்தகங்களை உப்பி லியபுரம் கட்சி இடைக் குழுவிற்கு அன்பளிப்பாக வழங்கினர். கிளைச் செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.
பதவி உயர்வை பறிக்கும் அரசாணையை திரும்பப் பெற கோரிக்கை
அரியலூர், ஜூன் 29- தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றக் கூடிய 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக் கூடிய மாநில முன்னுரிமைக்கான அரசாணை எண்.243-ஐ உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் (டிட்டோஜாக்) வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு இயக்கத்தின் ஒருங்கிணைப்பா ளர் ஓ.கருணாநிதி தலைமை வகித்தார். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் இ.எழில், தமிழக தொடக்கக் கல்வி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் க.பாண்டியன், தமிழ்நாடு ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலர் தெய்வ.குமார் ஆகியோர் உரையாற்றி னர். தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலை வர் துரை க.சுந்தரமூர்த்தி சிறப்புரையாற்றினார்.
பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட
தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடை நீக்கம்
தஞ்சாவூர், ஜூன் 29- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கு.திராவிடச்செல்வம் (60) பணி ஓய்வு பெற இருந்த நிலையில், இவரை வெள்ளிக் கிழமை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் மிரட்டுநிலை அரசு உயர்நிலை பள்ளியின் தலைமையாசிரியராக பணியில் சேர்ந்து, பின்னர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக கல்வித்துறை யின் உயர் அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இந்த புகார் நிலுவையில் உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை கு.திராவிடச்செல்வம் பணி ஓய்வு பெற இருந்தார்.
இதையடுத்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் இயக்குநர், திராவிடச்செல்வனை பணியிடை நீக்கம் செய்தார். அதற்கான அறிவிப்பு, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் வழங்கப்பட்டது.
தோட்டக்கலை துறையில் அரசு மானியத் திட்டங்கள் விவசாயிகளுக்கு அழைப்பு
தஞ்சாவூர், ஜூன் 29- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தோட்டக்கலைத் துறையில், நடப்பு ஆண்டுக்கான பல்வேறு அரசு மானிய திட்டங்கள் வந்துள்ளதாக பேராவூரணி தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தேசிய தோட்டக்கலை திட்டத்தின்கீழ் வீரிய ஒட்டு ரக விதைகளான வெண்டை, கத்தரி, மிளகாய், வீரிய ஒட்டு ரகங்களான மா, பலா, திசுவாழை போன்ற மரக்கன்றுகள், செண்டி பூ, சம்பங்கி போன்ற மலர் சாகுபடிகள், தேனிப்பெட்டி மண்புழு உர சாகுபடி கூடம், தென்னை யில் ஊடு பயிர் சாகுபடி, பாரம்பரிய காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் இயற்கை இடுபொருள்கள் மானியத்தில் வழங்கும் திட்டங்கள் ஆகியவை வந்துள்ளன.
மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் வாழை, பப்பாளி, கொய்யா, கறிவேப்பிலை அடங்கிய ஊட்டச்சத்து தழை போன்ற திட்டங்கள் வரப் பெற்று உள்ளன. மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், பேராவூரணி தோட்டக்கலை உதவி இயக்கு நர் அலுவலகத்தை அணுகிட கேட்டு கொள்ளப்படு கிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை
தஞ்சாவூர், ஜூன் 29- 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தஞ்சாவூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்து உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் மேலத் திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த பிரிட்டோ என்ற ஜான் (25) என்பவர், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் போக்சோ நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசா ரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஜானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அப ராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
பொன்னமராவதியில் 55 இடங்களில் நூறு நாள் வேலை தொடங்கியது
பொன்னமராவதி, ஜூன் 29- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதி ஒன்றியத்தில் 55 இடங்களில் நூறு நாள் வேலை தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட நூறு நாள் வேலை தற்போது பொன்னமராவதி ஒன்றியத்தில் 55 இடங்களில் தொடங்கப் பட்டுள்ளது. பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் இடையன் கண்மாயில் குளம் அமைக்கும் பணியை ஊராட்சித் தலைவர் செல்வி தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய பணி மேற்பார்வை யாளர் பொன்னையா, ஊராட்சி செயலாளர் அழகப்பன் கலந்து கொண்டனர்.
இதேபோல பொன்னமராவதி ஒன்றியத் தில் உள்ள திருக்களம்பூர், வேந்தன்பட்டி, வார்ப்பட்டு, மேலச்சிவபுரி, தொட்டியம் பட்டி, வேகுபட்டி, மயிலாப்பூர், ஆலவயல், காட்டுப்பட்டி, கொப்பனாபட்டி, தேனூர், செம்பூதி, மேலநிலை, கொன்னைப்பட்டி, செவலூர், கோவனூர், அரசமலை, நல்லூர், சேரனுர், காரையூர், அம்மன்குறிச்சி, கல்மம்பட்டி, மறவாமமதுரை, மேலத்தானி யம், முள்ளிப்பட்டி, இடையாத்தூர், வாழைக்குறிச்சி, சுந்தரசோழபுரம், நகரப் பட்டி எம்.உசிலம்பட்டி, ஒலியமங்கலம், பி. உசிலம்பட்டி, தூத்தூர் உள்ளிட்ட 42 கிராம ஊராட்சிகளில் 55 இடங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.
இந்தப் பணியின் முதல் கட்டமான குளம் வெட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பணி களை பொன்னமராவதி கிராம ஊராட்சி ஆணையர் ஆயிஷாராணி பார்வையிட்டு ஆய்வு செய்து பணியின் அளவு, பணி நேரம், வேலை செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து தொழிலாளர்களுக்கு விளக்கினார்.