கும்பகோணம், அக்.24- கும்பகோணம் மாநகராட்சி பேருந்து நிலையத்திற்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் சூட்ட வேண்டுமெனக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் செல்வம், ஆணையர் மற்றும் மேயரை சந்தித்து மனு அளித்தார். அம்மனுவில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சியால் நிர்வகிக்கப்பட்டு வரும் மாநகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து பிற மாநில, மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கும்பகோணம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றன. இதனால் கும்பகோணம் பேருந்து நிலையம் ஒரு சிறப்பு பெற்ற தலமாய் திகழ்கிறது. கும்பகோணத்தை தனது பூர்வீகமாகக் கொண்ட சாம்பசிவம் நகர்மன்றத் தலைவராக இருந்த போது, அவரது குடும்பத்தார், நகர் மற்றும் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க கும்பகோணம் நகராட்சிக்கு தங்களது சொந்த நிலத்தை வழங்கினர். இதனால், கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்திற்கு ‘சாம்பசிவம் பேருந்து நிலையம்’ என பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில் கும்பகோணம் பேருந்து நிலையம் இடம் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது அறிஞர் அண்ணா பெயரில் இயங்கி வருகிறது. தற்போது புதிதாக அமைக்கப்பட்டு இயங்கி வரும் நகரப் பேருந்து நிலையத்திற்கு, பழைய பேருந்து நிலையத்திற்கு இடம் கொடுத்த சாம்பசிவம் என்பவரின் மகனும், இந்திய வேளாண் துறையில் விவசாய புரட்சியை ஏற்படுத்திய வேளாண் விஞ்ஞானியுமான எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரைச் சூட்டி கும்பகோணம் மாநகருக்கு மேலும் சிறப்பு சேர்க்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.