districts

கும்பகோணம் - கல்லணை சாலையில் தடுப்பை நீக்கி பாதை அமைக்க வேண்டும்

கும்பகோணம், அக்.15- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்-கல்லணை சாலை தடுப்பை நீக்கி பாதை அமைத்து தர ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டுமெனக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனை பூம்புகார் கல்லணை சாலை தடுப்பு நீக்கு குழுவினர் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.  கும்பகோணத்திற்கு வந்த சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நேரில் அப்பகுதியை பார்வையிட்டு, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மேற்படி கோரிக்கையை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி செய்து தருமாறு கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில், ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் ஜெயராம் கட்கரிக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடிதம் எழுதியுள்ளார்.  அதில், “கும்பகோணம் (பாபுராஜபுரம்-புளியஞ்சேரி) அருகே தஞ்சாவூர் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டு வருகிறது. ஆனால் கும்பகோணம் - கல்லணை பூம்புகார் செல்லும் பாதை மறைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் சுற்றிச் செல்லும் நிலை உள்ளது. அப்பகுதி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள், அன்றாட தேவைகள், மருத்துவமனை வசதிகள் மற்றும் கிராமங்களுக்கு எதிர்ப்புறத்தில் உள்ள பள்ளிகளுக்கு செல்வதற்கு இந்த சாலையைத்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளதால், ஆம்புலன்ஸ்-கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முடியாமல் தவிக்கின்றன. இதனால் கிராம மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், வாகனங்கள் இரு வழிகளிலும் செல்வதற்கு, தற்போது கட்டுமானத்தில் உள்ள சுரங்கப் பாதைக்கு அருகில் மேலும் ஒரு சுரங்கப்பாதை தேவைப்படுகிறது. இது தொடர்பாக, இப்பகுதி மக்கள் சார்பில் பூம்புகார் கல்லணை சாலை தடுப்பு நீக்கும் குழு ஒருங்கிணைப்பாளர் கோதண்டபாணி, தஞ்சாவூர் திட்ட இயக்குநரிடம் புகார் அளித்துள்ளார். எனவே, இக்கிராம மக்கள் பயனடையும் பாபுராஜபுரம் - புளியஞ்சேரி பகுதியில் கல்லணை-பூம்புகார் சாலையின் இரு வழிகளிலும் செல்ல, கூடுதல் சுரங்கப் பாதை அமைப்பதற்கு தேவையான அனுமதியை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.