தஞ்சாவூர், ஜூலை 23 -
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, ஆனை விழுந்தான் குளத்தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (26). இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மாணவர் அணி மாநில பொதுச் செயலாளராக உள்ளார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1:30 மணிக்கு, பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ஸ்ரீகாந்தின் வீட்டை நோக்கி பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இதில் வீட்டின் முகப்பு கதவில் இருந்த திரைச்சீலை எரிந்தது. ஸ்ரீகாந்த் வீட்டின் வெளியே தீப்பிடித்து எரிவதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர், சத்தமிட்டு அவரை எழுப்பினர். அவர் உடனே வெளியே வந்து பார்த்து, தீயை அணைத்தார். இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் இதுகுறித்து ஸ்ரீகாந்த் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அக்கம் பக்கத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, பெட்ரோல் குண்டு வீச்சுக்கான காரணம் என்ன? ஸ்ரீகாந்திற்கும் வேறு யாருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததா? என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் காவல்துறை பாது காப்பு போடப்பட்டுள்ளது.