districts

img

தோழர் ஆர்.தாமோதரன் நினைவைப் போற்றுவோம்!

தொழிலாளர் வர்க்க த்தின் எழுச்சியை தூண்டும் போராட்ட முழக்கங்கள்… ஜோல்னா பை, சிரித்த முகத்தோடு கனிவோடு பேசும் தூய தமிழ் பேச்சு, புத்தக வாசிப்பு, கூட்டங்களில் குறிப்பெடுப்பு என சொல்லும் போதே நம் நினைவுக்கு வருவது மறைந்த தோழர் ஆர்.டி. என்று அன்போடு அழைக்கப்படும் இரா.தாமோதரன் ஆவார். ஆசிரியர் சங்கம், எழுத்தாளர் சங்கம், அவர் குடும்ப வாழ்க்கை, அரசியல் பொது வாழ்க்கை, என அனைத்திலும் சிறந்த உதாரணமாகவும் தனித்த அடையாளமாக திகழ்ந்து வாழ்ந்து மறைந்துள்ளார். மன்னார்குடியில் ரெங்கசாமி - ரெங்கநாயகிக்கு மகனாக 24.05.1945-ல் பிறந்து வளர்ந்த தாமோதரன் திருச்சி தேசியப் பள்ளியிலும், செயிண்ட் ஜோசப் கல்லூரியிலும் பள்ளி, கல்லூரி படிப்பை கற்றார். மேலும் ஐந்து பட்டயப் படிப்புகளையும் தமிழ், ஆங்கிலம், வரலாறு, அரசியல், பொருளாதாரம், நூலகவியல், மொழியாக்கம் போன்ற துறைகளில் 9 முதுகலை பட்டங்களையும் பெற்றார்.  இது மட்டும் இல்லாது இலக்கிய இதழ்களான தாமரை, செம்மலர், கணையாழி போன்ற பல்வேறு இலக்கிய இதழ்களையும் அனைத்து நாளிதழ்களிலும் தீக்கதிர், பீப்பிள்டெமாக்ரசி, மார்க்சிஸ்ட் போன்ற கட்சியின் நாளிதழ்களை வரலாற்று தேடலுடன் கூடிய ஆழமான வாசிப்பு பழக்கம் உள்ளவராக இளமைக் காலத்திலிருந்து கடைசி வரை திகழ்ந்தார்.

ஆசிரியர் இயக்கப் பணி:
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி ஆசிரியர் அமைப்புகள் வலுவாக இருந்த காலத்தில் ஆர்.டி. அவர்கள் ஆசிரியர் இயக்கத்தில் இணைத்துக்கொண்டு தீரமாக செயல்பட்டார். மன்னை தோழர் கே.நீலமேகம், திருத்துறைப்பூண்டி கே.வேதரெத்தினம், ஆர்.சந்திரசேகரன், ஆர்.இன்பநாதன், ஆர்.சண்முகம், எஸ்.தியாகராஜன், ஆர்.கோவிந்தராஜ் போன்ற பல ஆசிரியர் இயக்கத் தோழர்களோடு இயக்கப்பணி ஆற்றினார். 1985-ல் 44 ஆசிரியர் அமைப்புகள் இணைந்து உருவாக்கிய ஜாக்டீ அமைப்பு நடத்திய அரசாணை எதிர்ப்பு போராட்டத்தில் ஆர்.டி., கே.வேதரெத்தினம் உள்ளிட்ட 65 ஆயிரம் பேர் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு ஒரு மாத காலம் திருச்சி சிறையில் இருந்தார். தீபாவளி காலத்திலும் சங்கத்திற்காக சிறை தண்டனை அனுபவித்தார்.  1988-ல் அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கேட்டு தொடர் போராட்டம் நடைபெற்றது. இதில் பல லட்சம் தோழர்கள் தீவிரமான போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் ஆர்.டியும் கலந்துகொண்டார். திருவாரூர் மாவட்ட பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட பொருளாளராகவும், தலைவராகவும் சிறப்பான முறையில் பணியாற்றினார்.

சோவியத் ரஷ்யா - இந்திய கலாச்சார குழு:
சோவியத் ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு பண்பாட்டு கலாச்சார குழு நாடகம், இசை, நடனம், பாடல் என பல்சுவை கலைநிகழ்ச்சிகள் குழு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட முழுவதும் உள்ள கிராமப்புறங்களுக்கு அழைத்துச் சென்று தமிழாக்கம் செய்து வழிநடத்தியர் தோழர் ஆர்.டி அவர்கள்.

அறிவியல் இயக்கம் - அறிவொளி இயக்கம்:
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திலும், அறிவொளி இயக்கத்திலும் ஆர்.டி. மற்றும் அவரது துணைவியார் இராதா, மன்னை யேசுதாஸ், ஆழி அரங்கராஜன் மற்றும் பல சகதோழர்களோடு இணைந்து பணியாற்றினார். துளிர் இதழை அதிகளவில் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கினார். கிராமப்புற மக்களின் அறிவொளி இயக்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு சிறப்பாக செயல்பட்டார். அறிவொளி இயக்கத்தில் பயிற்சி ஆசிரியராக விளங்கினார்.  தஞ்சைத் தரணியில் தமுஎச அமைப்பை வளர்த்தெடுத்தவர் தோழர் தாமோதரன். பாரதியின் சிந்தனையையும், மார்க்சீய கொள்கையிலும் முழுவதும் ஈடுபாடு கொண்ட ஆர்.டி. அவர்கள் இறக்கும் 10.02.2022 கடைசி நாள் வரையிலும் சிறந்த கம்யூனிஸ்ட்டாகவே தஞ்சை தரணி செங்கொடி பாதையில் பயணித்திருக்கிறார். அவரின் நினைவுகளை போற்றுவோம்!. செவ்வணக்கம் செலுத்துவோம்!!.  

- ஜீ.வெங்கடேசன்