districts

img

மனுக்கள் மீது தீர்வு காண ஆட்சியர் ரத்தினசாமி உத்தரவு

அரியலூர், மே 27- ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உத்தரவிட்டார்.  அரியலூர் வட்டத்தின் கடைசி நாள் ஜமாபந்தி, ஏலாக்குறிச்சி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு, அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் ஏலாக்குறிச்சி வருவாய் கிராமத்திற்குட்பட்ட கிராம பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், உட்பிரிவு, பரப்பு திருத்தம், நத்தம் மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ள கோரிக்கை மனுக்களின் மீது, விரைவாக உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வு காணுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும், கிராம கணக்குகள் தொடர்பான கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, கணக்குப் பதிவேடுகளை முறையாக பதிவு செய்து பராமரிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.  ஜெயங்கொண்டம் ஜமாபந்தியில்  கோவணத்துடன் மனு அளிப்பு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், கோவணத்துடன் மனு அளிக்க வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் அரை நிர்வாணத்துடன் மனு அளித்த வாலிபர், எனது பாட்டனர் கோவணத்துடன் சம்பாதித்த சொத்தை, தனது பெயருக்கு மாற்ற அரை நிர்வாணத்துடன் மனு கொடுத்துள்ளதாக தெரிவித்தார். அரியலூர் மாவட்டம் கல்லாத்தூர் கிராமம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த சுரேஷ் (35) என்பவர், கடந்த 2021 ஆம் ஆண்டு தனது வீட்டுமனையில் அளவீடு குறைவாக உள்ளதாகக் கூறி, மீண்டும் அளவீடு செய்துதர வேண்டும் என உடையார்பாளையம் வட்டம், ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தார். இதில் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.  இந்நிலையில் தனது மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உடையார்பாளையம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், அரை நிர்வாணத்துடன் வந்து சுரேஷ் மனு அளித்துள்ளது, அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.