புதுக்கோட்டை, பிப்.15- புதுக்கோட்டை அருகே, திருவரங்குளம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு நடைபெற்றது. இதனை, மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டடோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் சனிக்கிழமை தொடங்கி வைத்தனர். அமைச்சர் எஸ்.ரகுபதி பேசும்போது; அடுத்த கால் நூற்றாண்டுக்குப் பிறகு தற்போது கிடைக்கும் தண்ணீரில் மூன்றில் ஒரு பங்குகூட கிடைப்பது கடினம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதனால்தான், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் போன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடும் தங்களது நிலப்பரப்புகளில் மூன்றில் ஒரு பங்கில் காடு வளர்க்க வேண்டும். அப்போதுதான் நீர் மேலாண்மையை கையாள முடியும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும் என உலக நாடுகளால் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த இலக்கை இந்தியாவால் இன்னும் அடைய முடியவில்லை. காடு வளர்ப்பதில் அனைவரும் அக்கறை காட்ட வேண்டும். இந்த அறிவியல் மாநாட்டில் நீர் மேலாண்மை குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ள இளம் விஞ்ஞானிகளின் கட்டுரைகளை சமர்ப்பிப்பது பாராட்டுக்குரியது. தேந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் புத்தகங்களாக வெளிவருவதும் பாராட்டுக்குரியது என்றார். அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசும் போது; எதிர்காலத்தில் தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் வந்தாலும்கூட ஆச்சர்யப் படுவதற்கில்லை. நீர் நிலைகளை மீட்டெடுக்க வேண்டும். புவி வெப்பமாதலினால் பல்வேறு பேரிடர்களை சந்திக்கிறோம். புவி வெப்பமாதலை தடுக்க, இயற்கையைப் பாதுகாக்க நீமேலாண்மை முக்கியமானது. தேசிய குழந்தைகள் மாநாடு நடத்துவதற்கு ஒன்றிய அரசு அனுமதிக்கவில்லை என இங்கே தெரிவித்தார்கள். இதையெல்லாம் அவர்கள் நடத்த மாட்டார்கள். ஒன்றிய அரசுக்கு அறிவியல் சிந்தனை இல்லை. ஒன்றிய அரசு கைவிட்டாலும் மாணவர்களுக்கான அறிவியல் சிந்தனைகளை வளர்ப்பதில் தமிழ்நாடு அரசு முக்கியப் பங்கு வகிக்கும். எஸ்எஸ்ஏ திட்டத்தில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.2152 கோடி ரூபாயை மாநில அரசுக்கு விடுவிக்காமல், ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறது. அதையும் மீறி ஏராளமான திட்டங்களை தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு செயல்படுத்தி வருகிறது என்றார். தொடக்க விழாவிற்கு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் டி.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். விஞ்ஞானி ஆர்.ராமானுஜம், அறிவியல் இயக்க மாநில பொதுச் செயலாளர் எம்.எஸ்.முகமது பாதுஷா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.சண்முகம், வரவேற்புக்குழுத் தலைவர் ஆர்.ராஜ்குமார், கவிஞர் நா.முத்துநிலவன், கவிஞர் ஜீவி, மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.தியாகராஜன் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக மாநில பொதுக்குழு உறுப்பினர் அ. மணவாளன் வரவேற்க, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.ஷோபா நன்றி கூறினார்.