பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கு வீட்டுமனைப்பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை விட அதிகரித்து வருகிறது. எனவே உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம்.
தொடர்ந்து, வரும் கல்வியாண்டில், 9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். மேலும், மாணவர்கள் செல்போனை வகுப்பறைகளுக்கு கொண்டு வரக்கூடாது. மீறி கொண்டு வந்தால் செல்போன் பறிமுதல் செய்யப்படும். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மீண்டும் தரப்படமாட்டாது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் அதிகமாக செல்போன்களை பயன்படுத்திய காரணத்தினால் நிறைய சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்வதற்கு பள்ளிகளில் முதல் ஐந்து நாட்கள் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு தான் வகுப்புகள் தொடங்கும்.
11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி தொடங்கிய உடன் தன்னார்வ அமைப்புகள், காவல் துறையை கொண்டு புத்தாக்க பயிற்சி வழங்கப்படும். தற்போது வகுப்பறைகளில் பாடம் எடுப்பதற்கு முன்பாக அவர்களுக்கு புத்துணர்வு அளிக்கப்பட்டு பின்னர் தான் வகுப்புகள் துவக்கப்படும், என்றார்.