அரியலூர், நவ.26 - முந்திரி பயிர்களுக்கும் காப்பீடு திட்டம் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறுகையில், “மாவட்டத்தில் படைப்புழு தாக்குதலால் பாதிப்புக்குள்ளான மக்காச்சோளப் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். ஏரி வண்டிப்பாதை மற்றும் புறம்போக்கு நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். டிராக்டர், பவர் டிரில்லருக்கு குறைந்தபட்ச வாடகை கட்டணத்தை நிர்ணயித்து, அதனை விவசாயிகளின் உழவுப் பணிக்கு விட வேண்டும். கூட்டுறவு சங்கத்தில் யூரியா தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில், 40 கிலோ மூட்டைக்கு ரூ.30 முதல் 40 வரை வசூல் செய்யப்படுவதை தடுக்க வேண்டும். மேலும் இதுகுறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கம் மையம் உள்ள கீழப்பழுவூரிலேயே வேளாண் இடுபொருட்கள் டெப்போவை கட்ட வேண்டும். 30 ஆயிரம் ஹெக்டரில் முந்திரி விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது முந்திரி கொட்டைக்கு விலையில்லாததால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மானியத்தில் முந்திரிக்கு அணை போட்டு (கரை அமைத்து) கொடுக்க வேண்டும். முந்திரிக்கு காப்பீடு திட்டம் கொண்டு வர வேண்டும். மக்காச்சோளம் பயிரால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு மாட்டு கொட்டகை அமைத்து தர வேண்டும். 2022-2023 ஆம் ஆண்டு உளுந்து பயிருக்கான காப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பசும்பால் லிட்டருக்கு ரூ.45 என விலை அறிவிக்க வேண்டும். கொழுப்புச் சத்துக்கு ஏற்றவாறு விலை அறிவிக்க வேண்டும். ஆவின் மூலம் 50 சதவீதம் மானியத்தில் மாட்டுத் தீவனம் வழங்க வேண்டும். 40 கிலோ கடலையை மூட்டைக்கு ரூ.4,000-க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும். அரியலூர் மாவட்டத்திலுள்ள 25,000 கிணறுகளை தூர்வார மானியத்தில் கடன் வழங்க வேண்டும். கடம்பூர் - வைப்பூர் கொள்ளிடம் ஆற்றங்கரையை அகலப்படுத்த வேண்டும். மழைநீர் ஓடைகளில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளில் நிகழாண்டு சாகுபடி செய்ய இயலாத விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகத்தில் அதிக பால் உற்பத்தி வழங்கிடும் மாவட்டமான அரியலூரில், கால்நடைகளுக்கு வைக்கோல் தீவனம் வழங்க வேண்டும். பால் உற்பத்திக்கு உதவிடும் வகையில் சிறு தானியங்களான கம்பு உள்ளிட்ட தீவனங்களையும் வழங்க வேண்டும்” என்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியர், அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.