அரியலூர், ஜூன் 23-
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சுரேஷ் (38). இவர், தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவ லகத்தை அண்மையில் அணுகியுள்ளார்.
அப்போது, பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் தரவேண்டும் என துணை வட்டாட்சியராக உள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தைச் சார்ந்த சிவஞானம் மகன் சரவணன் (48) என்பவர் கூறியதாக கூறப்படுகிறது. இதற்காக அதே வெத்தியார் வெட்டு கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மகன் சாம்பசிவம் (35) மற்றும் வீரப்பன் மகன் வீரா (25) ஆகியோர் இடைத் தரகர்களாக செயல்பட்டுள்ளனர்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ், லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து ரசாயனம் தடவிய பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் சுரேஷிடம் வழங்கியுள்ளனர். இந்நிலையில், ரசாயனம் தடவிய நோட்டுக்களை இடைத்தரகர் சாம்பசிவத்திடம் சுரேஷ் புதனன்று வழங்கியுள்ளார்.
சுரேஷிடம் இருந்து வீரா என்பவர் பணத்தைப் பெற்று வேறு ஒருவரிடம் கொடுத்து வைத்திருக்க கூறியுள்ளார். இதையடுத்து அப்போது, அங்கு மறைந் திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையிலான காவல்துறையினர் இடைத்தரகர்கள் சாம்பசிவம், வீரா இருவரையும் பிடித்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பணத்தை துணை வட்டாட்சியர் சரவணனுக்கு கொடுப்பதற்காக பெற்றுக்கொண்டதாக ஒப்புக் கொண்டனர். இதையடுத்து காவல்துறையினர் மூவரையும் கைது செய்தனர்.