திருச்சிராப்பள்ளி, ஆக.25 -
திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட்டை அடுத்த கூத்தூர் பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சிண்டிகேட் வங்கி செயல்பட்டு வந்தது. இந்த வங்கி கடந்த 2 வருடங்களுக்கு முன், கனரா வங்கியுட இணைக் கப்பட்டு கனரா வங்கியாக செயல்பட்டு வருகிறது.
இந்த வங்கியில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிபவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் இப்பகுதியில் வசிப்பவர்கள் என 6000-க்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 20 தினங்களுக்கு முன், கூத்தூர் வங்கி கிளை முன்பு, ‘இந்த வங்கி கிளை சுமார் 2 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பிச்சாண்டார் கோவில் கனரா வங்கி கிளையுடன் இணைக்கப்பட உள்ளதாக’ அறி விப்பு பலகை வைக்கப்பட்டது. இதையடுத்து கூத்தூர் ஊராட்சி ஒன்றிய கிராம சபை கூட்டத்தில், இந்த வங்கியை இடமாற்றம் செய்யக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தை ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டன் தலைமையில், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சிய ரிடம் கோரிக்கை மனுவாக கடந்த 15 நாட்களுக்கு முன் கொடுத்தனர். மேலும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (RBI) வாடிக்கையாளர் சேவை மையத்திற்கும் மின்னஞ்சல் மூலம் மனு அனுப்பினர். ஆனால், இந்த மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை வங்கியில் இருந்த பொருட்களை வங்கி ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த பொது மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூத்தூர் கிளைச் செயலாளர் குணசேகரன் தலைமையில் வங்கியை இடமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி, வங்கி முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த லால்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அஜய் தங்கத்திடம், பொது மக்கள் தங்கள் கோரிக்கைகளை கூறினர். அதில், “இங்கு இந்த வங்கியை துவங்கும் போது வீடு வீடாக வந்து கணக்கு துவங்க வலியுறுத்தினர். ஆனால் இங்கிருந்து வங்கியை இடமாற்றம் செய்வது குறித்து முறையாக அனைவருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை.
கூத்தூர் ஊராட்சியில் வேறு வங்கிகள் இல்லாத நிலையில், இந்த வங்கியை இங்கிருந்து சுமார் 2 கி.மீட்டர் தூரத்திற்கு அப்பால் இடமாற்றம் செய்கின்ற னர். இதனால் இங்குள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவர். எனவே இந்த வங்கியை இடமாற்றம் செய்யக்கூடாது” என்றனர்.
பின்னர் டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் வங்கி அதிகாரிகள், சிபிஎம் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட முத்தரப்பு அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில், கூத்தூரில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை அதே இடத்தில் நிரந்தரமாக வைக்க வேண்டும். சிடிஎம் கேஷ் டெபாசிட் இயந்திரம் ஒன்றை புதிதாக வைக்க வேண்டும். இப்பகுதியில் வங்கி மையம் அமைத்து அதன் மூலம் வாடிக்கையாளர்கள் சேவைகளை தொடர வேண்டும் என்றனர்.
இந்த கோரிக்கைகளை மண்டல அதிகாரி களுக்கு பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுப்ப தாக வங்கி அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
மயங்கி விழுந்த பெண்
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு முதலுதவி அளித்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.