தஞ்சாவூர், செப்.26 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஆவணம் டாக்டர் கலாம் பார்மசி கல்லூரி சார்பில், உலக மருந்தாளுநர்கள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தொடங்கிய பேரணியை பட்டுக்கோட்டை முன்னாள் நகர் மன்ற தலைவர் எஸ்.ஆர்.ஜவகர் பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார். பேராவூரணி காவல் உதவி ஆய்வாளர் புகழேந்தி கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தினை அறிமுகம் செய்து வழங்கினார். பேரணியில் டாக்டர் கலாம் பார்மசி கல்லூரியின் முதல்வர் டாக்டர் அன்பழகன், துணை முதல்வர் டாக்டர் பரிமளா தேவி, பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் மதிவாணன் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மருந்து கையாளும் முறை குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை கடைவீதியில் பொது மக்களிடம் வழங்கப்பட்டது.