districts

திருச்சி முக்கிய செய்திகள்

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை காண்ட்ராக்ட் விட எதிர்ப்பு

திருச்சிராப்பள்ளி, அக்.20 - தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் வெள்ளியன்று நடந்தது. கூட்டத்திற்கு சங்க மாநிலத் தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் சுகுமாறன் துவக்க உரையாற்றினார். வேலை அறிக்கையை தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் வாசித்தார்.  கூட்டத்தில், அகில இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பு முடிவின்படி அக்.25 அன்று மாவட்ட தலைநகரங்களில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது. ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலியை மின்வாரியமே நேரடியாக வழங்க வேண்டும். இந்த ஆண்டிற்கான போனஸ் வழங்க வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை காண்ட்ராக்ட் விடுவதை கைவிட்டு மின்வாரிய பணியாளர்களே ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி மற்றும் பராமரிப்பு பணியை  செய்ய அனுமதிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்தில் நிர்வாகிகள், கிளைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் கலந்து கொண்டனர். மாநில பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

பட்டுக்கோட்டை ஒன்றிய மாநாடு வரவேற்புக் குழு கூட்டம்

தஞ்சாவூர், அக்.20 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றிய 14 ஆவது மாநாடு வரவேற்புக் குழு கூட்டம் சனிக்கிழமை கிளைச் செயலாளர் எஸ்.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி வரவேற்றார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், எம்.செல்வம் ஆகியோர் பேசினர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் மற்றும் ஒன்றிய, நகரக் குழுவினர் கலந்து கொண்டனர்.  இதில், வரவேற்புக் குழு தலைவராக மெரினா ஆறுமுகம், செயலாளராக ரெ.ஞானசூரியன், பொருளாளராக என்.கந்தசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கொண்ட குழுவினருக்கு வேலைப் பகிர்வு அளிக்கப்பட்டது. ஒன்றியக் குழு உறுப்பினர் ரெ.ஞானசூரியன் நன்றி கூறினார்.