அரியலூர், ஜன.6- ஜெயங்கொண்டம் அருகே, பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மீன்சுருட்டி - கல்லாத்தூர் சாலையை, புதிய தார் சாலையாக போடுவதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் மீன்சுருட்டியில் திட்டமிட்டபடி 8 ஆம் தேதி மக்களை ஒன்று திரட்டி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என சாலை மீட்பு போராட்டக் குழுவினர், ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகம் முன்பு அறிவித்ததனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, மீன்சுருட்டியில் இருந்து கல்லாத்தூர் வரை சாலை அமைக்கப்பட வேண்டும் என அக்கிராம மக்கள் தமிழக அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் பொதுமக்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்காமல் கிடப்பில் போட்டு வருகிறது. இதனால், அதிருப்தி அடைந்த கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம், தெருமுனைப் பிரச்சாரம், கருப்புக்கொடி ஏந்தி போராட்டம், மோட்டார் வாகன பேரணி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியும் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் வருகின்ற 8 ஆந் தேதி மீன்சுருட்டி கடைவீதியில் பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக கிராம மக்கள் மற்றும் சாலை மீட்பு குழுவினர் அறிவிப்பு வெளியிட்டு துண்டு பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக உடையார்பாளையம் ஆர்டிஓ அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கிராம மக்கள் மற்றும் சாலை மீட்பு குழுவினரை திங்கட்கிழமை அழைத்தனர். அதன்படி, பேச்சுவார்த்தைக்குச் சென்ற சாலை மீட்புக் குழுவினர் நீண்ட நேரம் காத்திருந்தும் ஆர்டிஓ வராததால் அதிருப்தி அடைந்து அங்கிருந்து ஏமாற்றுத்துடன் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு செய்தியாளர்களை சந்தித்த சாலை மீட்பு குழு தலைவர் கு. பாலசுப்பிரமணியன், திட்டமிட்டபடி 8 ஆம் தேதி மின்சுருட்டி கடை வீதியில் பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதில், மீன்சுருட்டி பகுதியைச் சார்ந்த கிராம மக்கள், சாலை சீரமைப்புக் குழு து.தலைவர் செங்குட்டுவன், செயலாளர் சிவசுப்பிரமணியன், பொருளாளர் பெ.பாலகிருஷ்ணன், செயலாளர் ராஜசேகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.