districts

மாப்படுகை அரசு பள்ளியில் முப்பெரும் விழா

மயிலாடுதுறை பிப்-21,  மயிலாடுதுறை அருகேயுள்ள மாப்படுகை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி  கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை  வழங்கினார். இவ்விழாவில்  கலந்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் பேசுகையில், மாணவர் கள் வாசிப்பு பழக்கத்தை முதலில் கடை பிடிக்க வேண்டும். தினந்தோறும் செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தை மாண வர்களும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போது பொதுஅறிவு மிகச் சிறப்பாக வளரும். பள்ளியில் படிக்கும் பாடத்தை மட்டும் பயின்று தேர்ச்சி பெறுவது மட்டும் அல்லாது பொதுஅறிவும் கற்றால்தான் ஒரு மாணவர் சிறப்பான மாணவராக திகழ முடியும். படிப்பு ஒன்றே மாணவர்களுக்கு மிக முக்கியமானது ஆகும். தமிழ்நாடு அரசானது பள்ளிக் கல்வித்துறைக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.இதன் மூலம் பள்ளி மாணவ, மாணவியர்களின் கல்வித் தரம் மேன்மேலும் உயர்ந்து வருகிறது என்று தெரிவித்தார்.  அதனை தொடர்ந்து பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ,மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  நேர்முக உதவியாளர் முத்துக்கனியன், பள்ளி தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் தாமரைச்செல்வி, பெற்றோர் ஆசிரிய கழகத் தலைவர் வழக்கறிஞர் பாலு, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் சுகந்தி,பள்ளி மேலாண்மை க்குழு இராமலிங்கம், ஊராட்சி மன்றத் தலைவர் கனிமொழி ஜெயக்குமார், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் தி(சிவக் குமார், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கருப்பையா, ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.