districts

img

நெல்லுக்கு ரூ.3 ஆயிரமும், கரும்புக்கு ரூ.5 ஆயிரமும் விலை அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஜன.30-  ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில், நெல்லுக்கு ரூ.3 ஆயிரமும், கரும்புக்கு ரூ.5 ஆயிரமும் விலை அறிவிக்க வேண்டும் என தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கருத்துகள்: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் என்.வி.கண்ணன்: உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் பாசனத்திற்கு முழுமையாக தண்ணீர் கிடைக்காத வகையில், சோழகம்பட்டி காட்டுவாரியில் சைபன் பழுதடைந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சரி செய்யப்படாமல் உள்ளது. எனவே அதனை பழுதுநீக்கி சரி செய்து தர வேண்டும்.  எஸ்.புதூர் ஆர்.யுவராஜ்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டைக்கு 50 கிலோ கொள்முதல் செய்ய வேண்டும் என அரசாணை இருந்தும், 40 கிலோதான் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் (பொ) வி.கார்த்திகைசாமி: 50 கிலோ கொள்ளளவு கொண்ட சாக்கில், நெல்லை பொருத்தவரை 40 கிலோ வரைதான் நிரம்பும். ஆட்சியர்: இது தொடர்பாக தமிழக அரசின் செயலருக்கு கடிதம் எழுதி அனுப்பப்படும். அய்யம்பேட்டை கே.எஸ். முகமது இப்ராஹிம்: நெல் அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறையாக இருப்பதால், விவசாயிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர். வெளி மாவட்டங்கள் அல்லது வெளி மாநிலங்களிலிருந்து அறுவடை இயந்திரங்களை வரவழைக்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை அலுவலர்: மாவட்டத்தில் தற்போது 746 தனியார் அறுவடை இயந்திரங்களும், வேளாண் பொறியியல் துறை மூலம் 9 இயந்திரங்களும் பயன்பாட்டில் உள்ளன. மேலும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலிருந்து இயந்திரங்கள் வரவழைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. வெள்ளாம்பெரம்பூர் துரை. ரமேஷ்: வேளாண் பொறியியல் துறையில் மாவட்ட அளவில் 9 இயந்திரங்கள்தான் இருப்பது என்பது மிகவும் குறைவு. இதை அதிகப்படுத்த வேண்டும். ஆட்சியர்: அரசுக்கு கடிதம் எழுதி அனுப்பப்படும். அருமலைக்கோட்டை அரு.சீர். தங்கராசு: சாலையோரங்களில் மிகுந்த சிரமங்களுக்கு இடையே பனை விதைகளை விதைத்து வளர்த்து வருகிறோம். இந்நிலையில், சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பட்டுக்கோட்டை சாலையில் சாலையோரமுள்ள பனை மரங்கள் வெட்டி அகற்றப்படுவது வேதனை அளிக்கிறது. பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன்: தஞ்சாவூரில் முன்பு இருந்த தென்னை வளர்ச்சி வாரியம் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதை மீண்டும் தஞ்சாவூருக்கு கொண்டு வர வேண்டும். கே.ஆர்.புரம் சீனிவாசன்: கே.ஆர்.புரம் உள்ளிட்ட கிராமங்களில் சம்பா பயிர்களைக் காப்பாற்ற 15 நாட்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், 3 நாட்களுக்கு தண்ணீர் வரும் என நீர் வளத் துறையினர் கூறுகின்றனர். தொடர்ந்து 15 நாட்களுக்கு தண்ணீர் கிடைத்தால்தான் பயிர்களைக் காப்பாற்ற முடியும். தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் கரும்புக்கு டன்னுக்கு ரூ.5 ஆயிரமும், நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும் விலை அறிவிக்க வேண்டும். அம்மையகரம் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர்: ஒன்றிய அரசின் குழுவினர் ஆய்வு செய்த பிறகும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்வது தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வரவில்லை. இனிமேலும் காலம் தாழ்த்தாமல் விரைவாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு பேசினர்.