அரூர் அருகே அரசு பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்துச்சென்ற மூதாட்டியை பாதியில் இறக்கிவிட்ட அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தருமபுரி மாவட்டம், அரூரிலிருந்து ஒசூர் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு புறநகர் பேருந்தில், மூதாட்டி பாஞ்சாலை என்பவர் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றுள்ளார். இதையடுத்து, அவரை அரூர் - மொரப்பூர் வழித்தடத்தில் பாதுகாப்பு இல்லாத இடத்தில், பேருந்தில் இருந்து பாதியில் இறக்கிவிட்டதாக புகார் எழுந்தது. இப்புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட அரசு பேருந்தில் பணிபுரிந்த ஓட்டுநர் என்.சசிகுமார், நடத்துநர் கே.ரகு ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் தருமபுரி மண்டல பொதுமேலாளர் உத்தரவிட்டுள்ளார். பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்துச்சென்ற பயணியை இறக்கிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.