தஞ்சாவூர், மே 7- வன்முறையை தூண்டும் விதமாக பேசிய மன்னார்குடி ஜீயர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திராவிடர் கழகத்தினர் வெள்ளியன்று காவல் துறையில் புகார் மனு அளித்துள்ளனர். இதுதொடர்பாக கழகத்தின் மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: ‘‘தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் தேர் விபத்தை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற கடந்த 4-ஆம் தேதி வந்த மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களிடம் கூறியபோது, தருமபுர ஆதீனம் பட்டினப்பிரவேசம் தொடர்பாக தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளதை சுட்டிக்காட்டி வன்முறையை தூண்டும் விதமாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அப்போது தமிழக அரசையும், அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பி னர்களையும் சாலையில் நடமாடமுடியாது எனப் பேசி, அரசு இயந்திரத்தை முடக்கும் வகையில் கூறி, தமிழகத்தில் மதக்கலவரத்தையும், அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசியுள்ள ஜீயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என மனுவில் தெரிவித்துள்ளனர்.