தஞ்சாவூர், மே 7- கல்விச் சூழலை சீர்குலைத்து வரும் கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மீது முறையான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கழகத்தின் மாநிலத் தலைவர் மா.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘கரூர் மாவட்டம் குளித்தலை கல்வி மாவட்டம் கடவூர் ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர் ஒருவர் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியலுக்கு, வட்டாரக் கல்வி அலுவலரால், ஆசிரியரின் பணிப் பதிவேட்டை ஆய்வு செய்து எந்தவித குற்ற நடவடிக்கையும் இல்லை என சான்றளிக்கப்பட்டது. கலந்தாய்வுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டு அந்த ஆசிரியர், கலந்தாய்வில் கலந்து கொண்டபோது, ஒழுங்கு நடவடிக்கை உள்ளதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டு கலந்தாய்விலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு நியாயம் கிடைக்க போராடிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் 7 பேரை கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பது, மேலும் அந்த மாவட்ட கல்வித்துறை மீது தேவையற்ற குழப்பத்தை உருவாக்கி உள்ளது. எனவே, பள்ளிக் கல்வி ஆணையர், கல்வித் துறைக்கு களங்கம் விளைவிக்கும் கடவூர் வட்டார கல்வி அலுவலர், தவறுக்கு துணை போன மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மீது முறையான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எந்த தவறும் செய்யாத கரூர் மாவட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் பணியமர்த்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.