districts

உளுந்து பயிரில் பூச்சி நோய் கட்டுப்பாடு

தஞ்சாவூர், நவ.27- உளுந்து பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜி.சாந்தி விளக்கம் அளித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “உளுந்து பயிரைத் தாக்கும் பூச்சிகளில் தண்டு ஈ, அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ ஆகியவை முக்கிய பூச்சிகள் ஆகும். தண்டு ஈ தாக்குதலால் செடிகள் முற்றிலும் காய்ந்து விடும். இதைக் கட்டுப்படுத்த மானோகுரோட்டாபாஸ் மருந்தினை விதைத்த 7 ஆம் நாள் ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.  வளர்ச்சி பருவத்தின் போது தாக்கும் அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ ஆகியவற்றை கட்டுப்படுத்த மீத்தைல் டெமட்டான் அல்லது டைமீத்தோயேட் அல்லது பாஸ்போமிட்டன் இதில் ஏதாவது ஒரு மருந்தில், 2  மில்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். நோய்களில் மஞ்சள் தேமல் நோய், வாடல் நோய், வேர் அழுகல் நோய், சாம்பல் நோய் ஆகியவை முக்கியமானவை ஆகும். மஞ்சள் தேமல் நோய் தென்பட்டால் உடனே அந்த பயிரை பிடுங்கி அப்புறப்படுத்துவது சிறந்த கட்டுப்பாடாகும்.  வாடல் நோய் மற்றும் வேர் அழுகல் நோயால் தாக்கப்பட்ட செடிகளை பிடுங்கி அகற்றி அந்த இடத்தில் பாவிஸ்ட்டின் 10 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து செடியை பிடுங்கிய இடத்தில் அந்த கரைசலை ஊற்ற வேண்டும். இதனால் நோய் பரவாமல் தடுக்கப்படும். சாம்பல் நோய் தென்படும் இடங்களில் ஒரு லிட்டர் தண்ணீரில் நனையும் கந்தகத்தூளை 10 கிராம் கரைத்து தெளித்து கட்டுப்படுத்தலாம்” என தெரிவித்துள்ளார்.