தஞ்சாவூர், அக்.1 - தஞ்சாவூர் பெரியகோவிலில் இந்திரன் கற்சிலை மாயமானதாக கிடைத்த புகாரின் அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர். தஞ்சாவூர் பெரியகோவிலில், இரண்டாவது கோபுரமான ராஜராஜன் நுழைவு வாயிலில் இந்திரன் சன்னதியில் உள்ள சிலை மாயமாகி உள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறைக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் இந்திரா தலைமையிலான குழுவினர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக அரண்மனை தேவஸ்தானம், அறநிலையத்துறை, இந்திய தொல்லியல் துறை அதிகாரிகளிடம் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தனர். மேலும், கோவில் பணியாளர்கள், சிவச்சாரியார்கள், அறநிலையத்துறை பணியாளர்கள் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தினர். இந்திரன் சிலை தொடர்பாக இன்னும் இரண்டு நாட்களுக்கு ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும், அதன் பிறகே சிலை குறித்த தகவல்கள் முழுமையாக தெரியவரும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.