தஞ்சாவூர், மே 12- அறிவியல் உலகை இந்தியா முன்னெடுத்துச் செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது என சந்திரா யன் திட்ட முன்னாள் இயக்குநரும், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத் துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர் செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது: ‘‘உலக அளவில் கொரோனா பரவலுக்கு பிறகு உயிரி தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதை மருதுபாண்டியர் கல்லூரியில் முன்னெடுத்துச் செய்து வருகின்றனர். இப்போது, இக்கல்லூரியுடன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியும் சேர்ந்து உயர் நிலை ஆய்வுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியா, தமிழகம் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டுமானால் அறிவியல், தொழில்நுட்பத்தில் நாம் உலக அளவில் பின்தங்கிவிடக் கூடாது. இப்போது, நடைபெறக்கூடிய உயர் கட்டத் தொழில்நுட்பங்களான விண்வெளி, உயிரி தொழில்நுட்பம், கணினி, செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் நாம் பங்கெடுக்க வேண்டும். இதற்காக பெரிய ஆய்வுகளை மேற்கொள்வ தற்கான முயற்சிகளை ஆராய்ச்சியாளர்கள் மேற் கொண்டாலும், அது தொடர்வதற்கு அடுத்த தலைமுறைகள் முன்வர வேண்டும். அதற்கேற்ப அடுத்த தலைமுறைகள் உருவாகக்கூடிய நிலையைக் கல்லூரிகளும் செய்ய வேண்டும்’’ என்றார். விழாவிற்கு மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜி.ரவிக்குமார் சிறப்புரையாற்றினார். மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் மா.விஜயா, கல்வியியல் கல்லூரி முதல்வர் ப.சுப்பிரமணியன், ஆய்வு புலத் தலைவர் கோ.அர்ச்சுனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.