தஞ்சையில் மீன்தொட்டியில் 6 மாத பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மல்லிப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த நசருதீன் – சாஹிலா என்பவருக்கு 6 மாத பெண் குழந்தை இருந்தது. கடந்த 15 ஆம் தேதி அதிகாலை எழுந்து பார்த்தபோது குழந்தை காணாமல்போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து வீடு முழுவதும் தேடப்பட்டு வந்த நிலையில் வீட்டிற்கு பின்புறத்தில் வைக்கப்பட்டிருந்த மீன் தொட்டியில் குழந்தை மூழ்கி இறந்து கிடப்பதாக சாஹிலாவிடம் உறவினர்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் குடும்பத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்தி குழந்தையை இஸ்லாம் முறைப்படி அடக்கம் செய்திருக்கின்றனர்.
மேலும் குழந்தையின் இறப்பில் மர்மம் இருப்பதாக சாஹிலாவின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சாஹிலாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் இன்று வட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் குழந்தையின் பிரேதத்தை தோண்டி எடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், நசருதீனின் உறவினர் ஒருவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததையடுத்து இவர்கள் புதுக்கோட்டையிலுள்ள ஒரு மந்திரவாதியை அணுகியபோது அவர் 27 கோழிகளை பலியிடக் கூறியிருக்கிறார். பலி செலுத்தியபிறகும் அவர் உடல்நலம் பெறாததால் மீண்டும் மந்திரவாதியின் தூண்டுதலால் குழந்தையை பலி கொடுத்திருக்கலாம் என்றும் அக்கம் பக்கத்தினர் கூறியிருக்கின்றனர். இதனால் நசருதீன் உட்பட அவரது உறவினர்களை போலீசார் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.