districts

சென்னை முக்கிய செய்திகள்

கல்லூரி பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு

அம்பத்தூர், டிச. 18- அம்பத்தூர் அருகே அயப்பாக்கத்தில் தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடை யார்கோவில் வட்டம், இருமநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (24). இவர் ஆவடி அருகே அயப்பாக்கத்தில் தங்கியிருந்து, அங்குள்ள உணவகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலை யில் புதன்கிழமை தினேஷ்குமார் இரு சக்கர வாகனத்தில் அம்பத்தூர்- திரு வேற்காடு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது இருசக்கர வாகனம் மீது, அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதியது. இதில் இருசக்கர வாகனத்துடன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வேலூர் மாவட்டம் சின்ன அகமேடு கிராமத்தை பேருந்து ஓட்டுநர் பாபு (56) என்பவரை கைது செய்தனர்.

உயிரிழந்த மீனவருக்கு  ரூ.10 லட்சம் நிவாரணம் மீன்பிடி தொழிலாளர் சங்கம் கோரிக்கை

கடலூர், டிச.18- கடல் அலையில் சிக்கி உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட மீன் பிடி தொழிலாளர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.  இது குறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.பாலு, செயலாளர் பி.ஏழுமலை ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கடலூர் வட்டம், சித்திரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் (வயது 32), ஜானகிராமன் (58), சேகர் (53) ஆகிய மீனவர்கள் மூவரும் பைபர் படகில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்பொழுது ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்து நீரில் மூழ்கினர். அருகிலிருந்த ஊர் மக்கள் ஜானகிராமன், சேகர் ஆகிய இருவரையும் காப்பாற்றி கரை சேர்த்தனர். சுமார் 10 பைபர் படகுகள் மூலம் கடலூர் முதல் பரங்கிப்பேட்டை வரையில் தேடியும் ஜெகன் மட்டும் கிடைக்கவில்லை. இந்நிலையில், செவ்வாயன்று (டிச.17) சாமியார்பேட்டை அருகில் ஜெகனின் உடல் சடலமாக கரை ஒதுங்கியது. பின்னர் கிராம மக்கள் புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் கடலூர் அரசு பொது மருத்துவமனையில் உடற்கூராய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்த ஜெகன் குடும்பத்தாருக்கு ரூ.10லட்சம்  இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், அவருடைய மனைவிக்கு கல்வித் தகுதியின் அடிப்படை யில் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர் சங்க கூட்டமைப்பின் சார்பில் வலி யுறுத்துகிறோம் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

வேலூர் மாநகரில் தொடரும்  விபத்துகள் : 5 நாட்களில் மூவர் பலி

வேலூர், டிச 18 - வேலூர் சத்துவாச்சாரி, பேஸ்-2வை  சேர்ந்தவர் ஜான்சன் (வயது 70). இவரது மனைவி மேரி புஷ்பா ராணி (66). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவரும் பெங்களூரில் வேலை செய்து வருகின்றனர். ஜான்சன் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள  கிரீன் சர்க்கிளில் சென்ற போது பின்னால் வந்த லாரி ஜான்சன் பைக் மீது மோதியது. இதில் மேரி புஷ்ப ராணி லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது கணவர் ஜான்சன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். தகவல் அறிந்த வேலூர் வடக்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மேரி புஷ்பராணி உடலை  உடற்கூராய்வுக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்று கடந்த ஞாயிறன்று பேருந்து மோதி 28 வயது ஆணும், திங்களன்று லாரி மோதி அஸ்வினி (28)  ஆகியோர் உயிரிழந்தனர். வேலூர் மாநகரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மாநகராட்சியின் மெத்தனப் போக்கால் நடைபெற்று வரும் கால்வாய் கட்டும் பணிகளால் தொடர்ந்து விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.  மாவட்ட, மாநகராட்சி நிர்வாகமும், போக்குவரத்து காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.