சென்னை, ஜன.6- ஓமன் தலைநகர் மஸ்கட் நகரில் ஜனவரி 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை, 50க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 1000க்கும் அதிகமான வீரர்கள் கலந்து கொள்ளும் உலக மாஸ்டர் டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது. இதில் முன்னணி வீரர்கள் பயிற்சியாளர்கள் பலர் பங்கேற்கிறார்கள். இந்தியாவின், சார்பில், தமிழகத்தை, சேர்ந்த இரா.எத்திராஜன் பங்கேற்கிறார். இவர் வங்கிகளுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டி உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர். ஒற்றையர் இரட்டையர் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான மாஸ்டர் போட்டியில் எத்திராஜன் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை பெற்றார். தற்போது உலக அளவில் நடைபெறும் மாஸ்டர்ஸ் போட்டியில் பங்கேற்க ஒமன் டேபிள் டென்னிஸ் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் ரத்த தானம் செய்து வருகிறார். அதற்காக மாநில ரத்ததான கழகம், எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்தின் சார்பிலும் பாராட்டு பெற்றுள்ளார்.