districts

img

குடும்ப அட்டை கிடைக்காததால் மகளிர் உரிமை தொகை பெற முடியாமல் தவிக்கும் பெண்கள்

திருவள்ளூர், மார்ச் 2- குடும்ப அட்டை கிடைக்காததால் செஞ்சியகரம் வில்லியர் காலனி  பெண்கள் மகளிர் உரிமை தொகை கூட பெற முடியாமல் தவிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகில் உள்ள செஞ்சியகரம் ஊராட்சி வில்லியர் காலனியில் 75க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பங்கள் பல தலைமுறைகளாக வசிக்கின்றனர். சாலை, குடிநீர், மின் இணைப்பு பெற்றுள்ளனர். என்றாலும் ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்கள் வாழும் அவலநிலைக்கு ஆள்ளாகியுள்ளனர். அந்த அளவிற்கு இட நெருக்கடியால் அம்மக்கள் கடுமையாக பாதிக்கின்றனர். இப்படி 50 க்கும் மேற்பட்டவர்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும்.  பிஎம் ஜன்மன் திட்டத்தில் வீடுகள் வழங்க வேண்டுகோள் தொகுப்பு வீடுகள் கட்டியும் சிலருக்கு குடிமனை பட்டா கிடைக்காமல் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். ஏற்கெனவே 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் என்பதால், மேற்கூரை சிதிலமடைந்து கான்கிரீட் பூச்சிகள் சிதைய ஆரம்பித்துள்ளது. பெரிய அளவிற்கு விபத்துக்கள் நடக்கும் முன்பு, உடனடியாக எல்லாபுரம் பிடிஒ அலுவலக அதிகாரிகள் இதில் சிறப்பு கவனம் செலுத்தி ஒன்றிய அரசின் பிஎம் ஜன்மன் திட்டத்தின் கீழ் ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் தொகுப்பு வீடுகளை கட்டி கொடுக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள வீடுகளில் கழிப்பறைகள் இல்லாததால் பெண்கள் வெட்ட வெளியில் பாதுகாப்பு இல்லாமல் செடி, புதர்களில்  இயற்கை உபாதைக்கு ஒதுங்கும் அவல நிலை காலம் காலமாக தொடர்கிறது. இதனை போக்க கழிவறைகள் கட்டிக்கொடுக்க வேண்டும். இது குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, பகுதி நிர்வாகிகள் எம்.திருப்பதி, டி.சேகர் ஆகியோர் தெரிவிக்கையில், செஞ்சியகரம் வில்லியர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர்.கருவுற்ற தாய்மார்கள் சிகிச்சை பெற 5 கி.மீ. தூரம் செல்ல வேண்டியுள்ளது. அம்மக்களுக்கு மருத்துவ வசதிகளை மேற்கொள்ள வேண்டும், பழங்குடி இன கிராம வறுமை ஒழிப்பு சங்கம் செஞ்சியகரம் கிராமத்தில் செயல்படவில்லை. இதனை செயல்படுத்தி, முறையாக நிதி ஒதுக்கீடு செய்து,  குழுக்களை பராமரிக்க வேண்டும். பெரும்பாலான குடும்பங்களுக்கு குடும்ப அட்டை இல்லாததால், இலவசமாக வழங்கும் ரேசன் அரிசி கூட வாங்க முடியாமல், அந்தோ அரிசியையே காசு கொடுத்து வாங்க வேண்டியுள்ளது என புலம்புகின்றனர். ரேசன் அட்டை இல்லாததால், மகளிர் உரிமை தொகையும் பெற முடியவில்லை என குமுறுகின்றனர். ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் செஞ்சியகரம் வில்லியர் காலனியில் நேரடியாக சென்று விசாரணை செய்து, குடும்ப அட்டை மற்றும் குடிமனை பட்டாவை அனைவருக்கும் செஞ்சியகரம் கிராமத்திலேயே வழங்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். - பெ.ரூபன்