விழுப்புரம், ஜூலை 9- விழுப்புரம் நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் செல்லும் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை அடிக்கடி நகராட்சி ஊழியர்கள் சரி செய்தாலும் நிரந்தர தீர்வு ஏற்படவில்லை. சிறிதளவு மழை பெய்தாலே வெளியேற வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. உதாரணத்திற்கு விழுப்புரம் நகராட்சி பகுதியிலிருந்து கோலியனூர் வரை செல்லும் கோலியனூரான் வாய்க்கால் (ஆனந்தா மருத்துவமனை அருகில் ) அடிக்கடி தூர்வரப்படுகிறது. நிரந்தர தீர்வு எட்ட முடியவில்லை. காரணம், வாய்க்கால் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் நிரந்தரமாக அகற்றப்படவில்லை. இதனால் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் புதுச்சேரி மேம்பால வரைக்கும் அடைப்பு உள்ளது. இந்நிலையில் ஜூலை 8 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் ஆகியோர் நகராட்சி பகுதியில் ஆய்வு செய்தனர். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் இந்த ஆய்வுகள் கண் துடைப்பாக இல்லாமல் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.