சிதம்பரம், ஜன.11- காட்டுமன்னார்கோவில் அருகே திருமுட்டம் ஒன்றியத்திற்குட்பட்டது ஸ்ரீபுத்தூர் ஊராட்சி மன்றம். இதன் தலைவராக தலித் சமூகத்தைச் சார்ந்த கலைவாணி வெற்றி பெற்றார். இவரது கணவர் அர்சுணன். கணவன்-மனைவி இருவரும் திமுகவில் உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றியச் செயலாளரான உத்தமராசா ஊராசிமன்றத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும் அதிமுக முக்கிய நிர்வாகியுமான பழனிவேலும், உத்தமராசாவும் ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர்கள். ஊராட்சிமன்றத் தலைவர் தலித் என்பதால் சாதிய வன்மனத்துடன் அருகே அமர மறுக்கிறார்கள். ஊராட்சிமன்ற வளர்ச்சி பணிகளுக்கு ஒத்து ழைப்பும் கொடுப்பதில்லை. ஊராட்சிமன்றக் கூட்டங்களில் சாதிய உடல்மொழியுடனும், வன்மத்துடனும் நடந்துக்கெள்கின்றனர். ஊராட்சியில் எந்த வேலையும் தலைவர் செய்யக் கூடாது. தாங்கள் செய்யும் வேலைகள் குறித்து எந்த கேள்வியும் கேட்கக் கூடாது. நாங்கள் சொல்லும் இடத்தில் எல்லாம் கையெழுத்துபோட வேண்டும் என்று பொது இடங்களில் சாதி ரீதியாக ஒருமையில் பேசுகிறார்கள்.
இவ்வாறு குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டே செல்கிறார் பெண் தலித் ஊராட்சி தலைவர் கலைவாணி. ஊராட்சிமன்ற வளர்ச்சிக்காக சிறிது காலம் அமைதியாக இருந்துள்ளார். இதனால், ஊராட்சி மன்றத்தின் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கேக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் இருப்பது அவமானமடாக உணர்வதாக அவர் கூறுகிறார். இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ், காட்டுமன்னார்குடி வட்டக்குழு உறுப்பினர்கள் வெற்றிவீரன், பாண்டுரங்கன், திருமுட்டம் கிளைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி ரஜினிகாந்த் ஆகியோர் சம்பந்தபட்ட கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஊராட்சிமன்றத் தலைவர் தெரிவித்த புகார்கள் அனைத்தும் உண்மையெனத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ்,“ ஸ்ரீபுத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் கலைவாணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, கிராமங்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளாண்ட், தார் சாலை உள்ளிட்ட அவர் மேற்கொண்ட முயற்சிகள் மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது” என்றார். கிராமத்தின் வளர்ச்சிக்காக நடைபெறும் பணிகளுக்கு கையெழுத்திடாமல் தாமதம் செய்து வரும் துணைத் தலைவரது செயல்பாடுகள் கண்டிக்க தக்கது எனவும் கூறினார்.
முன்னாள் ஊராட்சி தலைவர் பழனிவேல் ஒப்பந்ததாரராகவும், அவரது மனைவி ஒன்றிய வார்டு கவுன்சிலராகவும் உள்ளனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவரும் ஒரே சமூகம் என்பதால் பெண் தலைவரை எந்தப் பணியும் செய்யவிடாமல் ஒடுக்கும் நோக்கத்துடன் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார். ஊராட்சிமன்றத் தலைவர் தலித் என்ற ஒரே காரணத்திற்காக சாதிய பாகுபாடுடன் நடந்து கொள்வது சரியான போக்கு அல்ல. இவ்வாறு நடந்துக்கொள்ளும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஊராட்சிமன்றத் தலைவரை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் வலியுறுத்தினார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பழனிவேல் மகன் முரு கானந்தம் இந்த ஊராட்சியில் செயலாளராக இருந்துள்ளார். தற்போது சுழற்சி முறையில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி தலித்திற்கு மாற்றப்பட்டதால், தலித் தலைவரின் கீழே வேலை செய்வதா? எனக்கூறி கொக்கரசன்பேட்டை ஊராட்சிக்குக் கட்டாய மாறுதல் வாங்கி சென்றுள்ளதும் இந்த ஆய்வின்போது தெரியவந்துள்ளது. சாதிய வன்மம் எந்த அளவிற்கு அங்குப் புரையோடியுள்ளது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சியாகும். எனவே சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தும் என்றும் ஊராட்சிமன்றத் தலைவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும் என்றும் பிரகாஷ் தெரிவித்தார்.