சிதம்பரம், ஜூன் 17- சிதம்பரம் மேலவீதி காய்கறி மார்க்கெட்டை உழவர் சந்தைக்கு இடம் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து காய்கறி வியாபாரிகள் நலச்சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். சிதம்பரம் மேலவீதியில் மார்க்கெட்டில் 150-க்கும் மேற்பட்ட காய்கறி, தேங்காய், பழக்கடைகள் உள்ளன. இதில் 100 கடைகள் தனியார் இடத்திலும், 50 கடைகள் சிதம்பரம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ளன. நகரத்தின் மையப் பகுதியில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட்டை சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு பகுதியிலுள்ள உழவர் சந்தைக்கு மாற்றம் செய்ய இரண்டு நாட்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கு சிதம்பரம் மேலவீதி காய்கறி வியாபாரிகள் நல சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். காய்கறி மார்க்கெட்டை இட மாற்றம் செய்யக்கூடாது என்றும் இதே இடத்தில் புதிய கடைகளை கட்டித்தர வேண்டும் என வலி யுறுத்தியும் வெள்ளியன்று (ஜூன் 17) காய்கறி மார்க்கெட்டை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சங்கத்தின் செயலாளர் ரவீந்திரன் செய்தியாளர்களி டம் கூறுகையில்,“ சிதம்பரம் மேலவீதி என்பது அனைத்து கடைகளும் உள்ள பகுதி. இந்த இடத்திலிருந்து காய்கறி மார்க்கெட்டை மட்டும் தனியாக பிரித்தால் பொதுமக்கள் சிரமப்படுவார்கள். ஆகவே, இதே இடத்தில் காய்கறி மார்க்கெட்டை கட்டித்தர வேண்டும்” என்றார்.