districts

img

போக்சோ வழக்குகளில் விரைந்து நியாயமும் தண்டனையும் பெற்றுத்தரப்படும்

திருவள்ளூர், பிப் 8- பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு கால தாமதம் ஏற்படாமல் உடனுக்குடன் சமூக நீதியும், பாதுகாப்பும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என  திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஜே.ஜூலியட்புஷ்பா தெரிவித்தார். திருவள்ளூரில் உள்ள  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கத்தில்,  அமைக்கப்பட்டுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தை  சனிக்கிழமையன்று (பிப் 8), மாவட்ட முதன்மை நீதிபதி ஜே. ஜூலியட் புஷ்பா திறந்து வைத்தார்.  மாவட்ட ஆட்சித் தலைவர் மு. பிரதாப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். ஸ்ரீநிவாச பெருமாள் ஆகியோர் முன்னிலையில் போக்சோ வழக்குக்கான சிறப்பு நீதிமன்றத்தினை திறந்து வைத்து முதல் விசாரணையை அவர் துவக்கி வைத்தார். பின்னர்  மாவட்ட முதன்மை நீதிபதி   பேசுகையில், உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்கவும், இந்திய அரசின் வழிகாட்டுதலின்படியும், 18 வயதுக்குட்பட்ட இளஞ்சிறார்களுக் காக கடந்த 2012 ஆம் ஆண்டு பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தை களை பாதுகாக்கும் போக்சோ சட்டம் (POCSO Act) இயற்றப்பட்டது. இச்சட்டமானது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் போன்ற குற்றங்களை தடுப்பதற்கும் அதற்கான தண்டனை குறித்தும் விரிவாக இயற்றப்பட்ட சட்டம் ஆகும். அதன்படி, தமிழக அரசின் 2-4-2013 தேதியிட்ட அரசாணை எண்.217-ன் படி, தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் மேற்படி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் குற்றங்கள் குறித்த வழக்குகளை விசாரிக்கவும் தண்டனை, தீர்ப்புகள் வழங்கவும், மகளிர் விரைவு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. அவ்வகையில், திரு வள்ளூர் மாவட்டத்திலும் விரைவு மாவட்ட மகளிர் நீதிமன்றம் துவக்கப்பட்டு, சமுதாய நலனை கருத்தில் கொண்டு, தூரித விசா ரணை நடத்தி, பாதிக்கப்பட்ட இளஞ்சிறார்களுக்கு பாதுகாப்பும் நீதியும் உறுதிப்படுத்தப்படும் என்றார். முன்னதாக போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நீதி பதியாக ஜி. சரஸ்வதி பொறுப்பேற்றுக் கொண்டார்.