சென்னை, பிப்,14- தற்செயலாக பூச்சிக் கொல்லி மருந்து கலந்த பழச்சாறு குடித்த 27 வயது பெண்ணுக்கு சென்னை யில் உள்ள தனியார் மருத்துவ மனையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம் ஓங்கோல் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது பெண். இவர் தற்செயலாக பெட் பாட்டிலில் பழச்சாற்றுடன் களைக்கொல்லி மருந்து கலந்து இருப்பது தெரியாமல் குடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது அவரது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்த்து. இதையடுத்து அவர் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள கிளெனீகிள்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் தொராசிக் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு திட்ட இயக்குனர் டாக்டர் கோவினி பாலசுப்ரமணி நோயாளியின் மருத்துவ அறிக்கைகளை பார்த்து, அந்த அறிக்கைகளின் அடிப்படையில் நோயாளியை சிகிச்சைக்கு அனுமதிக்கும்படி அறிவுறுத்தினார். இது குறித்து டாக்டர் கோவினி கூறுகையில், இங்கு அழைத்து வரப்பட்ட அப்பெண்ணை பரிசோதித்த போது அவரது கார்பன் டை ஆக்சைடு அளவானது ஆபத்து நிறைந்த வகையில் மிக அதிகமாக இருந்தது; சாதாரண மதிப்பை விட சுமார் நான்கு மடங்கு அதிகம். அந்த அளவானது 125ஐ எட்டியதால், உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. அவரது நுரையீரல் படிப்படியாக மோசமடையத் துவங்கியது, அவளைக் காப்பாற்ற ஒரே தீர்வு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைதான் என்று முடிவுசெய்து குடும்பத்தினர் ஒப்புதலுடன் அதை வெற்றிகரமாகசெய்து முடித்தோம் என்றார்.