districts

img

ஏழைகளை வஞ்சிக்கும் மோடி அரசை விரட்டியடிக்க வேண்டும் : ஜெர்க்.சி.தாமஸ்

திருவள்ளூர், அக். 16- ஏழைகளை பட்டினி போட்டு,  பெருமுதலாளிகளை வாழவைக்கும் பாஜக  மோடி அரசை விரட்டியடிக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஜெர்க்.சி.தாமஸ் கேட்டுக் கொண்டார். பழவேற்காடு அருகில் உள்ள காட்டுப்பள்ளியில் அதானி துறைமுகம் திட்டத்தை கைவிட வேண்டும்,  சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்ட பழவேற்காடு பகுதி யின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில்  ஞாயிறன்று (அக் 15)  பழவேற்காடு பஜாரில்  பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.கலையரசன் தலைமை தாங்கினார்.இதில் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.கார்த்திக், மாநில செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், பொருளாளர் எஸ்.பாரதி, மாநில துணைச் செயலாளர் கே.செல்வ ராஜ்,  திருவள்ளூர் மாவட்ட செயலாளர் டி.மதன், மாவட்ட துணைத் தலைவர் பி.ஜெய் கணேஷ் ஆகியோர் பேசினர். ஒன்றிய செயலாளர் எம்.சிவா நன்றி கூறினார். இதில் சங்கத்தின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஜெர்க்.சி.தாமஸ் பேசுகையில், சர்வதேச அளவில் பட்டினி யால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்கிற  பட்டியலில், இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசத்தை விட பின்தங்கியுள்ளது. இந்த நிலை யில் உழைப்பாளி மக்களின் உழைப்பை திருடி, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரி வழங்குகிறது மோடி பாஜக அரசு. நாட்டை பாதுகாக்க அல்ல, பிரதமர் மோடி ஆதரவோடு இந்திய நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கவே அதானி துறைமுகங்களை வளைத்து போடுகிறார்.  விமான, ரயில்வே போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்த ஒன்றிய அரசு பழவேற்காடு பகுதி யில் உள்ள 32 மீனவ குப்பங்களை அழிக்கும் காட்டுப்பள்ளி அதானி துறைமுக  திட்டத்தை கைவிட வேண்டும். ஜல்லிக் கட்டு போன்ற வலுவான போராட்டங்களை நடத்தி வெற்றி கண்ட  தமிழக மக்கள், காட்டுப் பள்ளி அதானி துறைமுக திட்டத்தை விரட்டியடிப்பார்கள்.  இதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் மீனவ மக்களுடன் இணைந்து போராடும் என்றார் ஜெர்க்.சி.தாமஸ்.  அவரின் மலையாள உரையை, கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ரித்திஸ் தமிழில் மொழியாக்கம் செய்தார்.